
எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
அத்துடன், இதன் உறுதித் தன்மை குறித்து அடுத்த சில நாட்களில் தெளிவாகக் கூற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இன்று முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பருவமழை
மேலும், 2026 ஆம் ஆண்டின் தென்மேற்கு பருவக்காற்றின் மாற்றம் நாளை மறுதினம் (19.05.2026) நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட பருவமழை இலங்கையில் சராசரியை அண்மித்த அளவில் கிடைக்கக்கூடும் என்றும், சில மாதங்களில் குறைவு அல்லது அதிகரிப்பு காணப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைவீழ்ச்சி சராசரியை விட சற்றே அதிகமாக இருக்கலாம் எனவும், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறைவாக இருக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சப்ரகமுவ, தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மூன்று காலப்பகுதிகளில் அதிக மழையுடன் கூடிய வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்கள் இந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் அதிக மழையைப் பெறும் பகுதிகளாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜூலை மாத இறுதியில் எல் நினோ நிலை மீண்டும் உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும், இது வறட்சி மட்டுமன்றி திடீர் அதிக மழை மற்றும் வெள்ள அனர்த்தங்களுக்கும் காரணமாக இருக்கக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.




