சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் 322 பேர் கைது

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பிரிவு கீழ் வரும் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் மொத்தம் 336 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் மூலம் ரூ. 20,65,000 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது ஹெரோயின், ஐஸ், கஞ்சா, ஹேஷ் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




