மின்சார பயனாளர்களுக்கு அரசின் மகிழ்ச்சி தகவல்

செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறைமுக, சிவில் விமான சேவைகள் மற்றும் எரிசக்தி அமைச்சர் அருண கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல வினாவுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பு மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நெருக்கடியால் உருவாகும் சூழ்நிலையை கருத்தில் கொண்டாலும், மின்சாரக் கட்டணம் உயருமா என்ற கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார்.
மின்சார விலை உயர்வின் நேரடி தாக்கம் 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், பொதுமக்களின் சுமையை குறைக்க அரசாங்கம் 15 பில்லியன் ரூபாவை மின்சார சபைக்கு வழங்கி ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டண உயர்வுக்கான எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.




