நல்லூர் கந்தன் பெருவிழா ஏற்பாடுகள் ஆரம்பம்: மாநகர சபைக்கு பட்டோலை வழங்கல்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு, பெருவிழா காலத்தில் ஆலய சூழல் பராமரிப்பு, பக்தர்களுக்கான அத்தியாவசிய வசதிகள், வீதி தடைகள் அமைத்தல் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னெடுக்க யாழ்ப்பாண மாநகர சபைக்கு பெருவிழா பட்டோலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலய சம்பிரதாய முறைப்படி வழங்கப்பட்டது.
பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி, ஆலய கணக்குப்பிள்ளையால் யாழ். மாநகர முதல்வர் வி. மதிவதனி மற்றும் மாநகர ஆணையாளர் கிருஷ்ணேந்திரன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வு பல வருடங்களாக பாரம்பரிய முறையில் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், பெருவிழாவின் 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா செப்டெம்பர் 09ஆம் திகதியும், மறுநாள் 10ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




