
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற கலவரத்தின் போது சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி ஒருவரை மையமாகக் கொண்டு சமூக வலைத்தளங்களில் பரவிய பின்னணிக் கதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என உண்மைக் கண்டறியும் அமைப்பொன்றின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூலை 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த பதற்றமான சூழ்நிலையில் சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடம்பெற்றிருந்த பெண் கைதியின் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஒரு வைத்திய மாணவி என்றும், காதல் ஏமாற்றத்தால் சிறைக்குச் சென்றவர் என்றும் கூறி சமூக வலைத்தளங்களில் உணர்ச்சிவசப்படுத்தும் வகையிலான கதை ஒன்று பரவலாக பகிரப்பட்டது.
இந்தக் கதை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதனை முதன்முதலில் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட நபர், அது உண்மையான சம்பவமல்ல என்றும், சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் தானே கற்பனையாக உருவாக்கிய பதிவு என்றும் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் விளக்கம் கோரப்பட்டபோது, கைதிகளின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நீர்கொழும்பு சிறைச்சாலையின் கூரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைதி குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வைத்திய மாணவி, காதல் தோல்வி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆதாரமற்ற கற்பனைக் கதைகளாகும் என உண்மைக் கண்டறியும் விசாரணை உறுதிப்படுத்தியுள்ளது.




