வவுனியாவில் கிணற்றில் விழுந்த காட்டு யானை: மீட்பு நடவடிக்கை தீவிரம்

வவுனியா மாவட்டத்தின் பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம் – மடத்துவிளாங்குளம் பகுதியில் கைவிடப்பட்டிருந்த பெரிய விவசாயக் கிணற்றில் காட்டு யானை ஒன்று விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிராமத்திற்குள் நுழைந்திருந்த காட்டு யானையே எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிணற்றிலிருந்து சத்தம் கேட்டதை அடுத்து சென்று பார்த்தபோது, யானை உள்ளே சிக்கித் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
இதையடுத்து கிராம மக்கள் உடனடியாக பாலமோட்டை கிராம அலுவலருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதன் பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தற்போது கிணற்றில் சிக்கியுள்ள யானையை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யானை மேலே ஏறி வரக்கூடிய வகையில், JCB இயந்திரம் மூலம் கிணற்றின் ஒரு பகுதி தோண்டப்பட்டு வெளியேறும் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை, காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தர தீர்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




