வவுனியா மாநகர முதல்வர், பிரதி முதல்வர் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் பதவிகளை வகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, ஜூன் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (19.05.2026) இந்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிபதி ஒருவர் சமூகமளிக்காத காரணத்தினால் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வவுனியா மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் சட்டத்திற்கு முரணானவை எனக் கூறி மாநகரசபை உறுப்பினர்கள் க. பிரேமதாஸ் மற்றும் சு. விஜயகுமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுவே இவ்வழக்காகும்.
முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக இடம்பெற்றதாகவும், பிரதி முதல்வராக தெரிவு செய்யப்பட்ட ப. கார்த்தீபன் மாநகரசபை எல்லைக்குள் வசிக்காததால் அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனவும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனு தொடர்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் பிரதிவாதிகளாக மாநகர முதல்வர் சு. காண்டீபன் மற்றும் பிரதி முதல்வர் ப.கார்த்தீபன் பெயரிடப்பட்டுள்ளனர்.




