
எதிர்வரும் ஒகஸ்ட் 28ஆம் திகதி அரிய வானியல் நிகழ்வாக பகுதி சந்திரகிரகணம் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திரகிரகணத்தின்போது நிலவின் சுமார் 96 சதவீதப் பகுதி பூமியின் அடர் நிழலுக்குள் செல்லவுள்ளதுடன், வெறும் 4 சதவீதப் பகுதி மட்டுமே வெளிச்சத்தில் காணப்படும்.
பொதுவாக முழு சந்திரகிரகணத்தின்போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். எனினும், இம்முறை 96 சதவீதம் மறைக்கப்படுவதால், பகுதி சந்திரகிரகணமாக இருந்தாலும் நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் தோன்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் வளிமண்டலத்தின் ஊடாகச் செல்லும் சூரிய ஒளி நிலவின் மீது படுவதால் இந்த சிவப்பு நிறத் தோற்றம் ஏற்படுகிறது.
இந்த கிரகணம் வட மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களில் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கும். ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் இதனைப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிகா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளிலும் கிரகணத்தின் தாக்கம் காணப்பட்டாலும், இலங்கையில் அது பகல் நேரத்தில் இடம்பெறுவதால் பொதுமக்களால் நேரடியாக அவதானிக்க முடியாது.
இலங்கை நேரப்படி ஒகஸ்ட் 28ஆம் திகதி காலை 8.04 மணிக்கு ஆரம்பிக்கும் கிரகணம், காலை 9.43 மணியளவில் உச்சத்தை அடைந்து, முற்பகல் 11.22 மணியளவில் நிறைவடையும்.




