மின்சாரக் கட்டணம் அதிரடி மாற்றம்

2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய கட்டண முறைமை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மின் உற்பத்திக்கான செலவுகள் உயர்ந்துள்ளதால் ஏற்பட்டுள்ள சுமார் 38 பில்லியன் ரூபாய் வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் மீதான சுமையைக் குறைக்கும் பொருட்டு, அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் மானியத்தை வழங்க இணங்கியுள்ளது. இந்த மானியச் சலுகை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
மாதந்தோறும் 180 அலகுகள் (Units) வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் சாதாரண வீட்டு நுகர்வோருக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது. எனினும், 210 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணங்கள் பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப அதிகரிக்கப்படவுள்ளன.
இதேவேளை மத ஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகள் வரையான பயன்பாட்டிற்கு கட்டண அதிகரிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட பயன்பாட்டுப் பிரிவுகளுக்கு கட்டண உயர்வு அமுலாகும்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்குப் பாதிப்புகள் இல்லாத போதிலும், பாரிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சுமார் 18 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களுக்கான கட்டணங்கள் சராசரியாக 11 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.
மின் உற்பத்திச் செலவு மற்றும் உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.




