
ஹட்டன் – டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிபத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவை காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொகவந்தலாவை – பெற்றசோ பெருந்தோட்டப் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து இன்று இந்த விசேட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிபத் தம்பதியினர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்திய காவல்துறையினர், CCTV காட்சிகளின் அடிப்படையில் பிரதான சந்தேகநபரை அடையாளம் கண்டிருந்தனர்.
அவரை கைது செய்வதற்கு பொதுமக்களிடமும் உதவி கோரப்பட்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த சந்தேகநபர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




