யாழ்ப்பாணத்தில் 12 வயது சிறுமியை கடத்த முயற்சியா? குறுகிய நேரத்தில் மீட்பு

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் நேற்று (24) பிற்பகல் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சபாபதிப் பிள்ளை வீதியைச் சேர்ந்த குறித்த சிறுமி, நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் கல்வி நிலையம் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது சிவப்பு நிற ஓட்டோ ஒன்றில் வந்த சிலர் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மேற்கொண்ட முயற்சியினால், சிறுமி குறுகிய நேரத்திற்குள் மீட்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒருவருக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், பாடசாலை மாணவிகளைத் தொந்தரவு செய்ததாக முன்னர் முறைப்பாடுகள் எழுந்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதிகாரப்பூர்வ விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளின் முடிவுகளே இறுதியானவை என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு இதுவரை வெளியாகவில்லை.
பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




