ராகுல் திராவிட்டின் மகன் அன்வே திராவிட் இந்திய யு-19 அணியில் – இலங்கை தொடரில் களமிறங்குகிறார்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான Rahul Dravid அவர்களின் இளைய மகன் அன்வே திராவிட், இலங்கைக்கு எதிரான யு-19 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
17 வயதான அன்வே திராவிட், விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்டக்காரருமான நிலையில் இந்திய யு-19 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை யு-19 அணிகளுக்கு இடையிலான தொடர் ஜூலை 4 ஆம் திகதி முதல் ஜூலை 20 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய யு-19 அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
கர்நாடக யு-19 அணியின் தலைவராக செயல்பட்ட அன்வே திராவிட், வினோ மன்கட் ட்ராபி தொடரில் ஆறு போட்டிகளில் 220 ஓட்டங்கள் குவித்து தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.
ஒருநாள் தொடருக்கான இந்திய யு-19 அணியில் யஷ்பரந்தன் சிங் சௌஹான் (தலைவர்), லக்ஷயா ராய்சந்தானி (துணைத் தலைவர்), சாகர் விர்க், வினீத் விகே, அர்ஜுன் ராஜ்புட், குஷாக்ரா ஓஜா, ரஜத் பாகேல், அன்வே திராவிட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
அதேவேளை, டெஸ்ட் தொடருக்கான அணியிலும் பல இளம் திறமையாளர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை மற்றும் இந்திய யு-19 அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் எதிர்கால சர்வதேச நட்சத்திரங்களை அடையாளம் காணும் முக்கிய மேடையாக பார்க்கப்படுகிறது.
ராகுல் திராவிட்டின் மகன் அன்வே திராவிட் இந்திய யு-19 அணியில் இடம்பிடித்திருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இலங்கை தொடரில் அவரது செயல்பாடு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



