ஹொரணை வங்கி கொள்ளை: பாதுகாப்பு அதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

ஹொரணை அரச வங்கியில் இடம்பெற்ற 3.5 கோடி ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு ஹொரணை தலைமை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு கெமரா காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளின் போது, குறித்த பாதுகாப்பு அதிகாரி இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான உதவி மேலாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
3.5 கோடி ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




