தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்கள் உடல்நலத்திற்கு ஆபத்து – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

உணவு தயாரித்தல் மற்றும் உட்கொள்ளும் போது தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவது பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாரடைப்பு, புற்றுநோய், ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் நீண்டகாலமாக தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதிகரிக்கக்கூடும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படும் நுண் துகள்கள் மற்றும் நச்சு இரசாயனங்கள் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என குறிப்பிட்டார்.
தேநீர் தயாரிக்கும் போது கொதிக்கும் நீரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் பயன்படுத்துதல், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் உணவுப் பெட்டிகளை நீண்டகாலம் பயன்படுத்துதல் போன்ற பழக்கங்கள் மூலம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உடலுக்குள் செல்லக்கூடும் என அவர் தெரிவித்தார்.
மேலும், பிளாஸ்டிக்கில் காணப்படும் பிபிஏ (BPA) போன்ற இரசாயனப் பொருட்கள் ஹோர்மோன் மாற்றங்கள், மலட்டுத்தன்மை மற்றும் பல்வேறு தொற்றா நோய்களுக்கு காரணமாக அமையக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நச்சுப் பொருட்கள் நீண்டகாலமாக உடலில் தேங்கும்போது இரத்த நாளங்கள் வழியாக மூளை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கக்கூடும் என்றும், இதனால் இரத்த நாள அடைப்பு மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமையல் மற்றும் உணவு சேமிப்பில் மண்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள், கண்ணாடி மற்றும் செராமிக் உபகரணங்களைப் பயன்படுத்துவது சிறந்தது என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.




