முதியோர் இல்ல தீ விபத்து: பணிப்பாளர் பிணையில் விடுதலை

ஹொரணை, அங்குருவாத்தோட்டையில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்த அந்த இல்லத்தின் பணிப்பாளர், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




