ஈரான் மீது இன்று இரவு கடும் தாக்குதல்? ட்ரம்பின் பதிவு பரபரப்பு

அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் வெளியிட்ட பதிவில், ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் அமைப்புகள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு வசதிகளின் பெரும்பகுதி ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னணியில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது “மிகக் கடுமையான” தாக்குதலை மேற்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமாகக் கருதப்படும் கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்கள் எதிர்காலத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் எனவும் ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெனிசுலாவில் பின்பற்றப்பட்ட மாதிரியைப் போன்று, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, அண்மைக் காலமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் இராணுவ மற்றும் அரசியல் பதற்றத்தின் மத்தியில் வெளியாகியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச மட்டத்தில் உருவாகியுள்ளது. அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் ஈரான் தரப்பிலிருந்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் வெளியாகவில்லை.




