ஹோர்முஸ் நீரிணையில் 2 ஈரானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட இரண்டு ஈரானிய ட்ரோன்களை அமெரிக்க இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கின் முக்கிய கடல்வழிப் போக்குவரத்து பாதையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் இந்த ட்ரோன்கள் அமெரிக்கப் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க இராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானிடமிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் முழுமையான தயார்நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் அண்மைக்காலமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் சர்வதேச எரிசக்தி சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலைகளும் உயர்வை பதிவு செய்துள்ளன.




