வவுனியா பசார் வீதியில் மர்ம சூட்கேஸ்: பொலிஸார் சோதனை நடத்தி அகற்றினர்

வவுனியா பசார் வீதியில் உரிமைகோரப்படாத நிலையில் நீண்ட நேரமாக காணப்பட்ட மர்மமான சூட்கேஸ் ஒன்று தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அதனை பொலிஸார் சோதனை செய்து அகற்றியுள்ளனர்.
குறித்த சூட்கேஸ் அப்பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றின் முன்பாக நீண்ட நேரமாக யாராலும் உரிமைகோரப்படாமல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த பொதுமக்கள் சம்பவம் குறித்து உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சூட்கேஸை திறந்து சோதனை செய்தனர்.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, அந்த சூட்கேஸிற்குள் ஆடைகள் மற்றும் மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்ட சில ஆவணங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சூட்கேஸின் உரிமையாளர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக அதனை பொலிஸார் தங்களது பொறுப்பில் எடுத்துச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




