
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், எட்டு ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த 12 இலட்சம் ரூபாய் பணத்தை எலிகள் கடித்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைகள் வாங்குவதற்காக தனது கணவருக்குத் தெரியாமல் பணத்தை சிறுகச் சிறுக சேமித்து வந்த குறித்த பெண், அவற்றை வீட்டின் பரண் மீது வைக்கப்பட்டிருந்த பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நகை வாங்குவதற்காக பணத்தை எடுக்க முடிவு செய்த அவர், நேற்று (23) பெட்டியைத் திறந்து பார்த்துள்ளார்.
அப்போது பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணத்தாள்கள் எலிகளால் கடித்து துண்டு துண்டாக சேதப்படுத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் சம்பவத்தை கணவரிடம் தெரிவித்த பெண் கண்ணீர் விட்டு அழுததாகவும், சேதமடைந்த பணத்தாள்களை எண்ணிப் பார்த்தபோது மொத்தம் 12 இலட்சம் ரூபாய் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலிகளால் சேதப்படுத்தப்பட்ட பணத்தாள்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.



