ஆண்டுக்கு 3 இலவச LPG சிலிண்டர்கள்; தமிழகத்தில் புதிய நலத்திட்டம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளாக உள்ள பெண்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அன்னபூரணி சூப்பர் 6’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம் 2027 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ரூபாயைத் தாண்டாத குடும்பங்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் 1.30 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் நன்மை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் சுமார் 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ரசீதுகளின் அடிப்படையில் சிலிண்டர் முன்பதிவு செய்து விநியோகிக்கப்பட்ட பின்னர், செலுத்தப்பட்ட தொகை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




