வவுனியாவில் 16.750 பவுண் தங்க நகைகள் கொள்ளை; நான்கு பேர் கைது

வவுனியா தேக்கவத்தை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16.750 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர், கொள்ளை இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கொள்ளையிடப்பட்ட நகைகளில் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததுடன், மற்றொரு பகுதி வவுனியா நகரிலுள்ள அடகுநிலையம் ஒன்றில் அடமானம் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவையும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட தங்க நகைகளின் மொத்த பெறுமதி சுமார் 57 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.




