சீரற்ற வானிலை காரணமாக சிலாபம் வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சிலாபம் பொது வைத்தியசாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வைத்தியசாலையின் மூன்று சிகிச்சை அறைகள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தினேஷ் கொக்கல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று இரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.
புத்தளம் – மாதம்பை, கலகிட்டியாவ வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அந்த வீதியின் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதையடுத்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு மாதம்பை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன், நள்ளிரவு முதல் பெய்து வரும் மழையால் நீர்கொழும்பு நகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
பெரியமுல்லை பிரதேசத்தில் கோமஸ் வத்தை, இரப்பர் வத்தை, தெனியாய வத்தை, செல்லக்கந்த உள்ளிட்ட பகுதிகளும், கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்தை உள்ளிட்ட பல பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், மக்கள் தமது வீடுகளை விட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.




