
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டி பகுதியில் இன்று (12) அதிகாலை பெய்த கனமழை மற்றும் வீசிய பலத்த காற்றால் மேல் இம்புல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது பெரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவத்தில் வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நடைபெற்றதை அடுத்து அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனிடையே, நாவலப்பிட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் பல மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், சில வீடுகள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், மரங்களுக்கு அருகிலும் ஆபத்தான பகுதிகளிலும் வசிப்பவர்கள் மற்றும் பயணிப்பவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.




