தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய 3 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு

வவுனியாவில் இருந்து கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டா வத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஹைட்ரஜன் பெரோக்சைட் இரசாயனத்தை பருகியதில் உயிரிழந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற 3 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி இரவு சுமார் 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டின் ஜன்னல் படியில் போத்தலில் வைக்கப்பட்டிருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி பருகியதாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயனத்தை பருகிய உடனேயே சிறுமியின் வாயிலிருந்து நுரை கலந்த உமிழ்நீர் வெளியேறியதாக அவரது தந்தை ஜே. விக்னேஸ்வரன் சாட்சியமளித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்ததும் சிறுமியை உடனடியாக பன்விலதென்ன மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மரண விசாரணை நேற்று (24) கம்பளை மருத்துவமனையில், தொழுவ பிரதேச செயலகப் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி லலித் வர்ணரத்ன முன்னிலையில் இடம்பெற்றுள்ளது.




