மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு

வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி மன்னனாகப் போற்றப்படும் மாவீரன் பண்டாரவன்னியன் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராக வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (25) முல்லைத்தீவில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள் மீது மாவீரன் பண்டாரவன்னியன் தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன் உள்ளிட்டோரும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.




