
சென்னையில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டுகளாக வெட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஊடகங்களின் தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி சென்னையில் இருந்து ஆந்திராவுக்குச் சென்ற ரயிலில் ரத்தக்கறையுடன் கூடிய சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் பெண்ணொருவரின் தலை, கை, கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்துள்ளனர். அதில் கண்ணாடி அணிந்த இளம் பெண்ணொருவரும், குறுந்தாடி வைத்திருந்த இளைஞர் ஒருவரும் சூட்கேஸை எடுத்துச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், சந்தேகநபர்கள் ஆட்டோ மூலம் கூடுவாஞ்சேரி மசூதி பகுதிக்குச் சென்றதை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் வீட்டை பொலிஸார் கண்டறிந்து அங்கு சென்றபோது அது பூட்டப்பட்டிருந்ததாகவும், பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் தென்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்காக தனிப்படை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




