குடும்பத் தகராறு விபரீதம்: மனைவியை கொன்ற கணவரும் உயிரிழப்பு

குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட படிவெல பகுதியில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்று இரு உயிர்களை பலிகொண்ட துயரச் சம்பவமாக மாறியுள்ளது.
பொலிஸார் தெரிவிப்பதாவது, படிவெல பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையில் நேற்று (10) காலை ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, 59 வயதுடைய கணவர் தனது 61 வயதுடைய மனைவியை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த பிங்கிரிய பொலிஸார், சந்தேகநபரான கணவரை கைது செய்துள்ளனர்.
எனினும், கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பிங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.




