நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த துயர சம்பவங்கள்

நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளன
அதன்படி கிளிநொச்சி – கனகாம்பிகைக் குளத்தில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கனகாம்பிகைக் குளத்தில் நேற்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தார்.
அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டார்.
கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மஹவ – பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நேற்று மாலை நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மஹவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போதே, இடையில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
