வெடுக்குநாறி மலை ஆலய வழிபாடு தொடர்பில் நடைபெற்ற விசேட கலந்துரையாடல்

வவுனியா மாவட்டத்தில் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ. சரத் சந்திர ஆகியோரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வவுனியா, நெடுங்கேணி நைனாமடு காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின்போது பக்தர்களுக்கு ஏற்படக்கூடிய சட்டரீதியான தடைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நூற்றாண்டுகள் பழமையான தொல்பொருள் மையத்திற்கு பல்வேறு தரப்பினரும் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபடுவதால் தொல்பொருள் இடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதனால் தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் வழிபாடுகளை முன்னெடுக்குமாறு வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தொல்பொருள் மையங்களை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டதுடன், அமைதியான முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.




