கிளிநொச்சியில் STF மக்கள் மோதல்; 9 பேர் கைது

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் மூக்கப்பன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சட்டவிரோதமாக அழிக்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கு கூடியிருந்த சிலர் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் நான்கு விசேட அதிரடிப்படை அதிகாரிகள் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




