முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்: வவுனியாவை வந்தடைந்த ஊர்தி பவனி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, தமிழினப் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் ஊர்தி பவனி இன்று (14.05.2026) மதியம் வவுனியா நகரை வந்தடைந்தது.
இந்த நினைவேந்தல் ஊர்தி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக உணர்வெழுச்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் A9 வீதி வழியாக பயணித்தது.
ஓமந்தை பகுதியை கடந்து வந்த ஊர்தி, இன்று மதியம் வவுனியா நகருக்குள் பிரவேசித்தது.
வவுனியாவை வந்தடைந்த நிலையில், “தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்” அமைப்பினர் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்தவர்களுக்கு வணக்கம்
அதனைத் தொடர்ந்து, வவுனியா மாநகர சபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு பொதுமக்கள் சுடரேற்றி, மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
மேலும், வவுனியா நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்தி பயணித்த போது, வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியோரங்களில் திரண்டு நின்று அஞ்சலி செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.




