இலங்கை
மட்டக்குளியில் 5 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் நபர் கைது

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெர்குசன் வீதியில், 5 கிலோ 140 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 40 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று (01) மதியம் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து, போதைப்பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணமும், போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்குளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.




