இலங்கை

GovPay கட்டணம் ஏற்க மறுக்கும் பொலிஸார் மீது நடவடிக்கை – பொலிஸ் எச்சரிக்கை

Desktop Image Mobile Image

GovPay அமைப்பு மூலம் சம்பவ இடத்திலேயே போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்கு வசதி செய்து தராத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸ் எச்சரித்துள்ளது.

வாகன சாரதிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதற்கும், அபராதம் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்களால் நேரமும் செலவும் வீணாகாமல் தடுப்பதற்கும் 2025 ஏப்ரல் மாதத்தில் GovPay கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டம் அனைத்து ஒன்பது மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும், இந்தச் சேவையை எளிதாக்கும் வகையில் லங்காபே ஊடாக பொலிஸ் நிலையங்களுக்கு சுமார் 4,000 கைபேசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தகுதியான போக்குவரத்து அபராதங்களில் சுமார் 12 சதவீதம் GovPay ஊடாக செலுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், சில போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் GovPay மூலம் பணம் செலுத்த விரும்பும் சாரதிகளின் கோரிக்கையை நிராகரித்து, பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்துவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

 

 

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சில அதிகாரிகள் வழங்கப்பட்ட சாதனங்களை எடுத்துச் செல்லாததும், சிலரின் திறமையின்மை மற்றும் சேவை மனப்பான்மை குறைபாடுகளும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு அதிகாரி GovPay முறை பற்றித் தெரியாது அல்லது அந்த வசதி இல்லை எனக் கூறினால் அது கடமை தவறாகவும் ஒழுங்கு மீறலாகவும் கருதப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

GovPay மூலம் அபராதம் செலுத்த அனுமதிக்க மறுக்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் 070 4756600 என்ற ஹாட்லைன் இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News:-samugammedia

Related Articles

Back to top button