இலங்கை

CCTV அபராதம் பெயரில் SMS மோசடி – பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

Desktop Image Mobile Image

சிசிடிவி (CCTV) கமெராக்கள் மூலம் கண்டறியப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிப்பதாகக் கூறி, போலியான SMS மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் அனுப்பி முன்னெடுக்கப்படும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செய்திகள் போலியான தொலைபேசி இலக்கங்களிலிருந்து அனுப்பப்படுவதுடன், அவை இலங்கை பொலிஸார் அனுப்பியதுபோல் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்திகளில் உள்ள இணைப்புகளைத் திறக்கும் நபர்கள், போலியான இணையதளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், அங்கு போக்குவரத்து அபராதத் தொகையை செலுத்துமாறு கோரப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், அந்த இணையதளம் அதிகாரப்பூர்வ GovPay கட்டண தளத்தை ஒத்த வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

 

 

மேலும், அந்த இணையதளத்தில் பணம் செலுத்த முயற்சிக்கும் போது, பயனர்களின் கடன் அட்டை விவரங்கள் மற்றும் பிற இரகசிய தகவல்கள் மோசடிக்காரர்களால் திருடப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும், இவ்வாறான மோசடி முயற்சிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Back to top button