அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி நல்லூரில் வடக்கு–கிழக்கு பெண்கள் போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் பின்புறத்தில் இன்று வடக்கு–கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பௌத்த துறவி பிணையில் விடுவிக்கப்பட்டதை கண்டித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு–கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடி நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, நீதி அமைச்சர், சட்டமா அதிபர், மகளிர் விவகார அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக மகஜர் கையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட அனுராதபுர சிறுமிக்கு நீதி கோரி இன்று மட்டக்களப்பிலும் பெண்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





