மட்டக்களப்பு விடுதி தீ விபத்து: உயிரிழந்த குழந்தைகளின் தந்தை குறித்து அதிர்ச்சி தகவல்கள்

மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு சிறுவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் குறித்து விசாரணைகளில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட நபர் உயிரிழந்த குழந்தைகளின் தந்தை எனத் தெரிவித்திருந்தாலும், அவர் பயன்படுத்திய அடையாள அட்டை போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
அந்த அடையாள அட்டை பதுளையைச் சேர்ந்த மற்றொருவருக்குச் சொந்தமானது என்றும், அது 2023ஆம் ஆண்டு காணாமல் போயிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் அந்த நபர் புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு தற்போது கடவத்தையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பண மோசடி
மேலும், சந்தேகநபர் தனது மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறி, குழந்தைகளுடன் பல இடங்களில் பிச்சை எடுத்து பண மோசடியில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆனால், அவரது மனைவி புற்றுநோயால் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய தகவலும் உண்மையல்ல எனவும், அவர் தற்போது மாத்தறை பகுதியில் வீட்டிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கைதான நபருக்கு எதிராக அத்துருகிரிய, சப்புகஸ்கந்த, அநுராதபுரம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், அவருக்கு எதிராக பிடியாணை ஒன்றும் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது ஆண் குழந்தையும் 5 வயது பெண் குழந்தையும் மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.




