காங்கேசன்துறை–கொழும்பு ரயிலில் மோதி இளம் தாய் உயிரிழப்பு

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அநுராதபுரம் சாலியபுர பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலியபுர பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுரத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றுக்கு ‘ஐஸ் பக்கெட்டுகள்’ விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லாததுடன், காவலர் ஒருவரும் பணியில் அமர்த்தப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், அந்தப் பகுதியில் ரயில் பாதை இருபுறமும் வளைவுகளைக் கொண்டிருப்பதால், பாதைக்கு அருகில் சென்ற பின்னரே இருபுறமும் வரும் ரயில்களை காண முடிவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்னர் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




