இரவு நேரத்தில் வீடு புகுந்ததாக குற்றச்சாட்டு; யாழ்ப்பாணத்தில் இளைஞர் கைது

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, கத்தி முனையில் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி இரவு தனது வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாகவும், கத்தி முனையில் தன்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும் குறித்த பெண் மறுநாள் 15ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதன் மூலம் சந்தேகநபரை அடையாளம் கண்ட பொலிஸார், குறித்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று 17ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளின்போது, கடந்த 14ஆம் திகதி பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது தானே என சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, குறித்த இளைஞர் இதற்கு முன்னரும் வேறு வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளாரா அல்லது வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




