13 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; வவுனியா பாலியல் துஷ்பிரயோக வழக்கில் தந்தைக்கு கடும் தண்டனை

வவுனியாவில் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா நேற்று (21) தீர்ப்பளித்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது சிறுமிக்கு 14 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பிரிந்திருந்த நிலையில், சிறுமி தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2021ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்டகால விசாரணைகளின் பின்னர் குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையுடன் 50,000 ரூபா தண்டப்பணமும் விதித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தை செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனையும், நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலதிக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் வயது, குற்றத்தின் தன்மை மற்றும் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளை கருத்தில் கொண்டே நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




