வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு

தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று (23) வவுனியாவில் நடைபெற்றது.
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தமது பதவிப் பொறுப்புகளை சட்டரீதியாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் சட்டங்களை இயற்றுதல், வருமானத்தை அதிகரித்தல், மக்களின் தேவைகளை அடையாளம் காணுதல் மற்றும் அதனடிப்படையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் பின்பற்ற வேண்டிய சட்டரீதியான நடைமுறைகள் குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.
தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த செயலமர்வில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் மற்றும் ப. சத்தியலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வன்னியின் மூன்று மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.




