டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல் – நாடளாவிய சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (15) முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று முதல் 17ஆம் திகதி வரை நகரங்கள், வடிகால் அமைப்புகள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் விரிவான சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், 18ஆம் திகதி பாடசாலைகள், முன்பள்ளிகள், தனியார் மேலதிக வகுப்பு நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் அவற்றின் சுற்றுப்புற சூழல்களும் சுத்தம் செய்யப்படவுள்ளன.
அதேவேளை, 19ஆம் திகதி அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பணியிட வளாகங்களை சுத்தப்படுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, 20ஆம் திகதி தனிப்பட்ட வீடுகள் மற்றும் வீடுகளைச் சுற்றியுள்ள வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
டெங்கு பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதுடன், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கிய நீர் காணப்படும் இடங்களை உடனடியாக அகற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
டெங்கு ஒழிப்பு வாரத்தின் வெற்றிகரமான முன்னெடுப்பு மூலம் நோய் பரவலைக் குறைத்து, மக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.




