அம்பாறையில் பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: அரச ஊழியர் உயிரிழப்பு

அம்பாறை – மருதமுனை பிரதான வீதியில் இன்று (16) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மருதமுனை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கதிர்காமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜெயராமன் ஜெகதீஸ்வரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்ததுடன், மட்டக்களப்பு கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவராகவும், திருமணத்திற்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பாண்டியிருப்பு பகுதியில் வசித்து வந்தவராகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.




