திருடிய மோட்டார் சைக்கிளை மீண்டும் அதே வீட்டின் முன் விட்டுச் சென்ற திருடர்கள் – ஓட்டமாவடியில் வினோத சம்பவம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள், அதனை திருடிச் சென்றவர்களால் மீண்டும் அதே வீட்டின் முன்பாக கொண்டு வந்து விடப்பட்டுள்ள வினோத சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஓட்டமாவடி தபாலக வீதியில் உள்ள வீடொன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத இருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.30 மணியளவில் திருடிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா (CCTV) பதிவுகளில் தெளிவாக பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக வாழைச்சேனை பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
எனினும், பொலிஸாரின் விசாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையிலேயே, திருடிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் அதன் உரிய ஆவணங்கள் மற்றும் தலைக்கவசத்துடன் திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் அதே வீட்டின் முன்பாக கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தது.
வீட்டின் உரிமையாளர் அதிகாலை வெளியே வந்தபோது, காணாமல் போன தனது மோட்டார் சைக்கிள் மீண்டும் அதே இடத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
திருடர்கள் எந்த காரணத்திற்காக வாகனத்தை மீண்டும் திருப்பி கொண்டு வந்தனர் என்பது இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.




