பணத் தகராறு விபரீதம்: தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் கைது

மாத்தறை மாவட்டத்தின் திக்வெல பகுதியில் பணக் கொடுக்கல்–வாங்கல் தொடர்பான தகராறு காரணமாக அண்ணன் ஒருவர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (06) மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, 45 வயதுடைய அண்ணன் மதுபோதையில் தனது தம்பியின் வீட்டிற்குள் கூரிய ஆயுதத்துடன் அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், பின்னர் அது கைக்கலப்பாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதலின் போது, சந்தேகநபர் தனது தம்பியை கூரிய ஆயுதத்தால் பலமுறை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தையடுத்து, நான்கு பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திக்வெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




