இலங்கை
களனி–வனவாசல இடையில் தொடருந்து பெட்டி தடம்புரண்டு விபத்து

களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் தொடருந்தின் ஒரு பெட்டி தடம் புரண்டுள்ளது.
வனவாசல மற்றும் ஹுனுபிட்டியா இடையேயான ரயில் பாதையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதன் காரணமாக பிரதான தொடருந்து பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொல்கஹாவெலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தொடருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் சிறு காயங்களுக்கு உள்ளான 12 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான காரணங்கள் குறித்து தொடருந்து திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




