அசாமில் இந்திய விமானப் படை ஏஎன்-32 விமானம் விபத்து – 5 வீரர்கள் உயிரிழப்பு

இந்தியாவின் அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் விமானப் படையின் ஐந்து வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு இன்ஜின்கள் கொண்ட இந்த விமானம், ஜோர்ஹட் விமானப் படை நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்திருந்த ஐந்து விமானப் படை வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக இந்திய விமானப் படை தனது சமூக ஊடகப் பதிவில், இன்று காலை சுமார் 10 மணியளவில் வழக்கமான பயணத்தின் போது ஏஎன்-32 விமானம் விபத்துக்குள்ளானதாக உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணையின் தொடக்க முடிவுகள் வெளியாகும் வரை யூகங்களையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் தவிர்க்குமாறும் இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டுள்ளது.
உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இந்திய விமானப் படை, இந்த துயரமான தருணத்தில் அவர்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
விபத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக விசேட விசாரணைக் குழு நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.




