
வெப்பச் சுட்டெண்ணின் தாக்கம் காரணமாக இன்று (26) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் வேளையில் அதிக வெப்பநிலையை உணரக்கூடிய சூழ்நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேநேரம், சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம். புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பரப்புகளிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்புகளிலும் இடைக்கிடையே பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மீனவர்கள், கடல்சார் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



