திருகோணமலையில் பயங்கர விபத்து; தீயில் கருகிய ரேசிங் மோட்டார் சைக்கிள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் கித்துலூத்து, 147ஆம் கட்டைப் பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற கடுமையான சாலை விபத்தில், ரேசிங் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்ததுடன், அதனைச் செலுத்திச் சென்ற 27 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
ஆரம்பகட்ட தகவல்களின்படி, திருகோணமலையிலிருந்து ஹபரணை நோக்கிப் பயணித்த இந்திய தம்பதியினர் சென்ற கார் மற்றும் எதிர்திசையில் வந்த ரேசிங் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோதலின் தாக்கம் காரணமாக மோட்டார் சைக்கிள் பல துண்டுகளாகச் சிதறி கணநேரத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. பலத்த காயமடைந்த இளைஞர் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் லேசான காயமடைந்த அவரது மனைவிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதையடுத்து அவர் விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவத்திற்கான காரணம் குறித்து கல்லோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




