யாழ்ப்பாணம்இலங்கைவடக்கு மாகாணம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

Desktop Image Mobile Image

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகளின் போது, மேலும் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று (09) நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 20ஆவது நாள் விசேட தடயவியல் ஆய்வின் போது, பச்சிளம் சிசு மற்றும் சிறுவர்களுடையவை என அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடைபெற்ற அகழ்வுப் பணிகளின் போது, புதிதாக ஒரு சிசுவின் எலும்புக்கூட்டுத் தொகுதியும் அடையாளம் காணப்பட்டது. பின்னர் கண்டறியப்பட்ட அனைத்து எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் சர்வதேச தடயவியல் நடைமுறைகளுக்கு அமைவாக சுத்தம் செய்யப்பட்டு தனித்தனியாக இலக்கமிடப்பட்டன.

 

 

அதனைத் தொடர்ந்து, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த சிறுவர்களின் 8 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மொத்தம் 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டு பாதுகாப்பாக பொதியிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் 1 மற்றும் தளம் 2 ஆகிய இரு பகுதிகளிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மொத்தம் 327 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

 

 

அவற்றில் 311 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் சட்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் மேலதிக பரிசோதனைகளுக்காக முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதிக்கு அருகில் பழமையான நாணயக் குற்றி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம் புதைகுழியின் காலப்பகுதியை தீர்மானிக்க உதவும் முக்கிய சான்றாக கருதப்படுவதால், அது 112ஆவது சான்றுப்பொருளாக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வாராய்ச்சி மற்றும் தடயவியல் விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button