தலவத்துகொட உணவக தீ விபத்து: சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (09) காலை இடம்பெற்ற இந்த தீ விபத்தில் ஆரம்பத்தில் நால்வர் காயமடைந்திருந்தனர். அவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தலவத்துகொட சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள உணவகத்தில் திடீரென தீ பரவியதையடுத்து, அங்கு பணியாற்றிய மற்றும் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு தீ அணைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, எரிவாயு கசிவே இந்த தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த மற்றைய நபருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




